பொதுமக்களிடம் மதுபோதையில் ரகளை

புதுச்சேரி, டிச. 6: புதுச்சேரி மங்கலம் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மங்கலம்-உறுவையாறு சாலையில் அமுதசுரபி பார் அருகே மர்ம நபர் ஒருவர் குடிபோதையில் அவ்வழியாக சென்ற பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார். உடனே அவரை போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மங்கலம் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் (57) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

இதேபோல் முத்தியால்பேட்டை காவல்நிலைய போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வைத்திக்குப்பம் பாப்பம்மாள் கோயில் சுடுகாடு பகுதியில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் தகாத வார்த்தைகளால் திட்டி பொதுமக்களிடம் அநாகரீகமாக நடந்துள்ளார். உடனே போலீசார், அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது அவர் வைத்திக்குப்பம் மணிகண்டன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: