14% பெரிதாகவும், பிரகாசத்துடனும் கொடைக்கானலில் `குளிர் முழு நிலவு’: வியந்து ரசித்த சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்றிரவு தென்பட்ட `குளிர் முழு நிலவை’ சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்து ரசித்தனர். வானில் நிகழும் அரிய நிகழ்வுகளில் ஒன்றான `குளிர் முழு நிலவு’ (FULL COLD MOON) இந்த ஆண்டு டிச.4ம் தேதி, பவுர்ணமியன்று தென்படும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற, மலைகள் சார்ந்த சுற்றுலா தலமான கொடைக்கானலில் `குளிர் முழு நிலவு’ நேற்று இரவு தென்பட்டது. முன்னதாக, நேற்று காலை முதல் சாரல் மழை, அடர்ந்த பனி மூட்டம் என மாறி மாறி சூழல் நிலவி வந்தது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் இரவில் வானில் மேகங்கள் விலகி தெளிவாக காணப்பட்டது. இதையடுத்து,`குளிர் முழு நிலவு’ தென்பட்டது. இது வழக்கத்தைவிட சுமார் 14 சதவீதம் பெரிதாகவும், பிரகாசத்துடனும் காணப்பட்டது. இந்த அரிய நிகழ்வை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

இதுகுறித்து வானிலை ஆர்வலர்கள் கூறுகையில், `தற்போது பூமிக்கும், நிலவுக்கும் இடையிலான தொலைவு தூரம் 3 லட்சத்து 57 ஆயிரம் கி.மீ, அதாவது, 10 முதல் 14 சதவீதம் வரை குறைந்துள்ளது. பூமிக்கு அருகே நிலவு வந்துள்ளதால் வழக்கத்தைவிட பெரிதாகவும், பிரகாசமாகவும் தெரிகிறது. குளிர் காலமாக டிசம்பர் மாதம் தென்படும் இந்த நிலவை `குளிர் முழு நிலவு’ என்று அழைக்கிறோம். இதற்கு முன்பு கடந்த 2023ம் ஆண்டில்தான் குளிர் முழு நிலவு தோன்றியது. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தோன்றியுள்ளது. அடுத்து 2028ம் ஆண்டுதான் வானில் இந்த நிகழ்வு ஏற்படும் என்று கூறினர்.

Related Stories: