அணைக்கட்டு அருகே வாட்டர் பாட்டில்களில் சாராயம் கடத்தியவர் கைது

அணைக்கட்டு, ஜன.12: அணைக்கட்டு அருகே பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில் சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். அணைக்கட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை அப்புக்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் நிலையில் பையுடன் நடந்து சென்றவரை பிடித்து விசாரித்தனர். அவர் அப்புக்கல் சித்தேரியை சேர்ந்த கோவிந்தன்(45) என தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்த பையை சோதனை செய்ததில், 1 லிட்டர், அரை லிட்டர் அளவுள்ள பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில் சாராயம் இருப்பது தெரியவந்தது. மேலும், போலீசுக்கு தெரியாமல் மலையடிவாரத்தில் இருந்து ஊருக்கு சாராயத்தை கடத்திச்சென்றது தெரியவந்தது.

பல மாதங்களாக இந்த கடத்தலில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து 1 லிட்டர், 2 லிட்டர், அரை லிட்டர் என மொத்தம் 12 வாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கமாக பேரல், லாரி டியூப்கள், பிளாஸ்டிக் கவர்களில் சாராயம் வைத்து விற்பனை செய்து வந்த நிலையில், நூதன முறையில் வாட்டர் பாட்டில்களில் சாராயம் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: