புதுடெல்லி: ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டுமென்ற கட்டாய உத்தரவை ஒன்றிய அரசு நேற்று திரும்பப் பெற்றது. ஸ்மார்ட்போன்கள் உளவு பார்க்கப்படும் என்ற குற்றச்சாட்டுகளால் கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.புதிதாக விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே தயாரிப்பு நிறுவனங்கள் நிறுவ வேண்டுமென இந்திய தொலைதொடர்பு துறை கடந்த 28ம் தேதி அறிவித்தது. அடுத்த 90 நாட்களுக்குள் அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த உத்தரவுக்கு இணங்க வேண்டுமெனவும் கட்டாயப்படுத்தப்பட்டது. இவ்வாறு செல்போனில் குறிப்பிட்ட செயலி கட்டாயமாக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த செயலி, செல்போன் பாதுகாப்பு, அடையாள பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் மோசடிக்கு எதிரான பாதுகாப்புக்கான சிறந்த வழிமுறை என ஒன்றிய அரசு தெரிவித்தது.
உங்கள் மொபைல் எண்ணில் எத்தனை சிம்கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன, உங்கள் செல்போனின் ஐஎம்இஐ எண் பாதுகாப்பானதா என்பதையும் பயனர்கள் இந்த செயலி மூலம் அறிய முடியும். ஆனால் இந்த செயலியை பயன்படுத்த, பயனர்கள் தங்கள் செல்போன் எண்ணை கொடுத்து ஓடிபி மூலம் இணைக்க வேண்டும். எஸ்எம்எஸ், அழைப்புகள், கேமரா, கேலரி போன்றவற்றை அணுகுவதற்கான அனுமதியை அளிக்க வேண்டும். எனவே, இந்த செயலி மூலம் செல்போன்களை உளவு பார்க்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ஆப்பிள் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் சஞ்சார் சாத்தி செயலியை தங்களின் புதிய செல்போன்களில் முன்கூட்டி நிறுவ மறுப்பு தெரிவித்தன. இந்த செயலில் வேண்டுமென்றால் பயனர்கள் நீக்க முடியும் என ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா விளக்கம் அளித்தார். ஆனாலும், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் நேற்று எதிரொலித்தது. மாநிலங்களவையில், இந்த விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் எம்பி ரன்தீப் சுர்ஜிவாலே, ‘‘இது ஒவ்வொரு தனிநபரின் தனியுரிமை கொள்கையை முற்றிலும் மீறுவதாகும். ஒவ்வொரு நபரும் எங்கு செல்கிறார் என்ற தகவல்களை நிகழ்நேர முறையிலும் இந்த செயலி மூலம் கண்காணிக்க முடியும். அவர்களின் எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் தகவல்களையும் வேவு பார்க்க முடியும். இது தனியுரிமை மீறல்’’ என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் பதிலளித்த ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ‘‘சஞ்சார் சாத்தி செயலி மூலம் உளவு பார்க்க சாத்தியமில்லை, அப்படி எதுவும் நடக்கவும் இல்லை. ஏற்கனவே சஞ்சார் சாத்தி இணையதளம் மூலம் பாதிக்கப்பட்ட பல லட்சம் பயனர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. 26 லட்சம் திருடப்பட்ட போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 7 லட்சம் போன்கள் உரிமையாளர்களிடம் திருப்பி தரப்பட்டுள்ளது. 41 லட்சம் மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 6 லட்சம் மோசடி நபர்கள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளனர். எனினும் மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் சஞ்சார் சாத்தி செயலி கட்டாய உத்தரவில் மாற்றங்கள் செய்யவும் அரசு தயாராக இருக்கிறது’’ என்றார்.
இதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘அனைத்து மக்களுக்கும் சைபர் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன், அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தியது. இந்த செயலி பாதுகாப்பானது மற்றும் சைபர் உலகில் உள்ள தீய செயல்களில் இருந்து பாதுகாப்பதில் உதவுவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர வேறு எந்த செயல்பாடும் இல்லை. மேலும் எப்போது வேண்டுமானாலும் செயலியை அகற்றலாம். இதுவரை 1.4 கோடி பயனர்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். பயனர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சஞ்சார் சாத்திக்கு அதிகரித்து வரும் வரவேற்பு காரணமாக, மொபைல் உற்பத்தியாளர்களுக்கு முன்கூட்டி நிறுவுவதை கட்டாயமாக்க வேண்டாம் என்று அரசு முடிவு செய்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் 10 மடங்கு அதிகரிப்பு;
தொலைதொடர்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சஞ்சார் சாத்தி செயலி பதிவிறக்கம் 10 மடங்கு அதிகரிதுள்ளது. தினசரி சராசரியாக சுமார் 60,000 பேர் செயலியை பதிவிறக்கிய நிலையில் நேற்று 6 லட்சமாக உயர்ந்துள்ளது. சஞ்சார் சாத்தி செயலிக்கு திடீரென பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது’’ என்றார். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே 1.5 கோடி பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர் என ஒன்றிய அரசு கூறி உள்ளது.
