அறந்தாங்கி, டிச. 3: மணமேல்குடி அருகே கிருஷ்ணாஜிபட்டினத்தில் பொதுமயான கரைக்குச் செல்ல பாலம் அமைக்க கோரி தமிழர் தேசம் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணாஜிபட்டினம் ஊராட்சியில் உள்ள அண்ணாநகர், 118 சுப்பிரமணியபுரம், கோவில்வயல் ஆகிய பகுதிகளில் உள்ளவர்களுக்கு பொதுமயானம் உள்ளது. இந்த மயானத்திற்கு செல்ல வேண்டும் என்றால் தண்ணீர் செல்லும் வாய்காலை கடந்து தான் செல்லவேண்டும்.
தண்ணீர் இல்லாத போது ஏரியை கடந்து இறந்தவர்களின் உடலை மயானகரைக்கு எளிதாக கொண்டு சென்று விடுகின்றனர். தற்போது மழை பெய்து வாய்காலில் தண்ணீர் முழு கொள்ளளவு சென்று கொண்டு உள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் இந்த பகுதியில் இறந்த ஒருவரை மயானத்திற்க்கு கொண்டு செல்ல அப்பகுதி பொதுமக்கள் வாய்காலில் தண்ணீரில் இறங்கி சிரமத்துடன் வாய்காலை கடந்து பொதுமயாத்திற்க்கு கொண்டு சென்றனர். இதனால், இந்த பகுதி பொதுமயானத்திற்க்கு செல்ல பாலம் கட்டிதரவேண்டும் என இது குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை என கோரி நேற்று தமிழர் தேசம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
