சிவகங்கை, ஜன.12: சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் முன்னிலை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கினார். மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களில் 6 ஆயிரத்து 95 ஆண்களுக்கும், 16 ஆயிரத்து 898 பெண்களுக்கும் என மொத்தம் 22 ஆயிரத்து 993 நபர்களுக்கு ரூ.1 கோடியே 71 லட்சத்து 11 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் பொங்கல் பரிசு தொகுப்புப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சுப்பிரமணியன், உதவி ஆணையர் கோட்டீஸ்வரி, காஞ்சிரங்கால் ஊராட்சி தலைவர் மணிமுத்து, கூட்டுறவு வங்கித் தலைவர் சசிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.