திருவள்ளுவர் திடல் மைய பகுதியில் உயர் மின்கோபுரம் மீண்டும் அமைக்க கோரிக்கை

பொள்ளாச்சி, ஜன.11: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மீண்டும் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி நகரில் மக்கள் நடமாட்டம் மற்றும் பகல், இரவு  என தொடர்ந்து போக்குவரத்து மிகுந்த இரு பஸ் நிலையம் மத்தியில் உள்ள டிராபிக் சிக்னல் பகுதி, கோவை ரோடு காந்தி சிலை பகுதி, தேர்நிலை உள்ளிட்ட பல இடங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் எரிய செய்யப்பட்டு பின் மறுநாள் காலையில் அணைக்கப்படுகிறது. ஆனால், சில இடங்களில் உள்ள மின்கோபுரத்தில் உள்ள விளக்குகள் எரிவதில்லை. இதில் வியாபார நிறுவனம், மக்கள் நடமாட்டம், போக்குவரத்து மிகுந்த இடமான மார்க்கெட் ரோடு, ராஜாமில் ரோடு சந்திப்பு திருவள்ளுவர் திடலில் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டது.

சில ஆண்டுகள் மட்டும் அந்த உயர்மின் கோபுரம் பராமரிக்கப்பட்டது. அதன்பின், மின்விளக்குகள் சரிவர எரியாததால், பெரும்பாலான இரவு நேரங்களில் அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. அதன்பின், சில மாதத்திற்கு முன்பு அந்த உயர் மின் கோபுரம் சேதமடைந்தது. இதற்கிடையே, மார்க்கெட் ரோடு பராமரிப்பு பணி அமைக்கப்பட்ட நிலையில், அண்மையில் திருவள்ளுவர் திடலில் இருந்த உயர் மின் கோபுரம் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால்,  இரவு நேரத்தில் அந்த இடத்தில் பஸ் ஏற வரும் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் போதிய வெளிச்சம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். நள்ளிரவு நேரத்தில் இருள்சூழ்ந்து இருப்பதால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, திருவள்ளுவர் திடலின் மையப்பகுதியில் மீண்டும், உயர்மின் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: