மானாமதுரை நீதிமன்றம் எதிரே வாலிபர் வெட்டி கொலை 4 பேருக்கு வலை

மானாமதுரை, ஜன.11:  மானாமதுரையில் நீதிமன்றம் எதிரே வாலிபரை வெட்டி கொன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் அருண்நாதன் (27). மானாமதுரை அருகே வேலூரை சேர்ந்தவர் வினோத்கண்ணன் (29). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மானாமதுரை நீதிமன்றம் எதிரே உள்ள காம்ப்ளக்சில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு இரண்டு டூவீலர்களில் வந்த 4 பேர் அருண்நாதன், வினோத்கண்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த இருவரும் ரோட்டில் ரத்த வெள்ளத்தில் மயங்கினர். உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், கொண்டு செல்லும் வழியில் அருண்நாதன் பரிதாபமாக இறந்தார். சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினோத்கண்ணன் முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கொலையான அருண்நாதன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. நீதிமன்றம் எதிரே வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: