சென்னை: வங்கக் கடலில் குமரிக் கடல் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் 6 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், மலேசியா மற்றும் அதை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதியில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிகோபார் தீவுகளுக்கு தென்கிழக்கே சுமார் 700 கிமீ தொலைவிலும், கார்நிகோபர் தீவில் இருந்து கிழக்கு- தென்கிழக்கே 800 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மெதுவாக மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மேலும் வலுப்பெறும். இது தவிர நேற்று முன்தினம் குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டு இருந்த வளி மண்டல கீழடுக்கு சுழற்சி குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் – இலங்கை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நேற்று மாறியது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகவும் வலுப்பெற்றுள்ளது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறும். மேற்கண்ட இரு நிகழ்வுகளின் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதே நிலை இன்றும் நீடிக்கும். 27ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 28ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநிலை 29ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் அறிவிக்கப்பட்டள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மேலும் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வ ளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் இன்று முதல் 29ம் தேதி வரையில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்தபகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
