பெண் ரியல் எஸ்டேட் அதிபர் காருக்குள் அடித்து கொலை

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆவுடையப்பொய்கை காட்டுப்பகுதியில் கார் ஒன்றில் பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், கொலையானவர் காரைக்குடி மருதுபாண்டியர் நகரை சேர்ந்த பாண்டிக்குமார் மனைவி மகேஸ்வரி(35) என்பது தெரியவந்தது. இவரது கணவர் வெளிநாட்டில் உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் வெளிநாட்டில் மருத்துவம் படித்துவரும் நிலையில், மற்றொருவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். ரியல் எஸ்டேட் செய்து வரும் மகேஸ்வரி, நேற்று காலை இடம் பார்ப்பதற்காக ஆவுடையப்பொய்கை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, கார் கதவில் தலையை பலமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் அணிந்திருந்த நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து டிஎஸ்பி கவுதம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது, காரில் இருந்து சிறிது தூரம் சென்றது. மேலும் கொலை தொடர்பாக மகேஸ்வரி வீட்டின் அருகே வசிக்கும் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: