நெல்லை, டிச. 29: நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகள் மற்றும் அம்ருத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் குறித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு ஆய்வு நடத்தினார். அப்போது கலெக்டர் பேசியதாவது: நெல்லை மாநகராட்சி பகுதியில் நடந்து வரும் ஸ்மார்ட்சிட்டி திட்டம் மற்றும் அம்ருத் திட்டத்தின் கீழ் நடக்கும் பணிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. நெல்லை டவுன் பழைய பேட்டை பகுதியில் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கான முனையம் ரூ.14.67 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி கனரக வாகனங்கள் நிறுத்த போக்குவரத்து சீர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இயற்கை எழில் கொஞ்சும் நயினார் குளக்கரை பகுதியை பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக அழகிய மற்றும் கண்கவரும் நடைபாதை அமைக்கும் பணிகள் விரைவுபடுத்த வேண்டும்.