வேலூர், டிச.26: வேலூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி அனைத்து கிறிஸ்துவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு நடந்த கூட்டு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். சிஎஸ்ஐ மத்திய தேவாலயத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிளவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தேவாலயம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குழந்தை யேசுவின் பிறப்பை விளக்கும் வகையில் அலங்கார பொம்மைகளுடன் குடில் அமைக்கப்பட்டிருந்தது. குழந்தைகள் மகிழும் வகையில் கிறிஸ்துமஸ் மாஸ்க் பொம்மைகள் மற்றும் பிரத்யேக விளையாட்டு அரங்குகள் வைக்கப்பட்டிருந்தன. அதிகாலை முதலே கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.