கோவை, டிச.18: கோவை கொடிசியா நகர அலுவலகத்தில் தொழில் அமைப்புகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கொடிசியா, சீமா, டாக்ட், டாப்மா, காட்மா, கோப்மா, காஸ்மா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் மத்திய உருக்கு துறை அமைச்சரை நேரில் சந்தித்து மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக முறையிடுவது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் செயில், விசாக், ஜிண்டால் போன்ற நிறுவனங்களிடம் இருந்து மூலப்பொருட்களை நேரடியாக பெறும் வகையில் இங்குள்ள தொழில் அமைப்புகள் பங்கு பெறும் ஒரு கூட்டமைப்பை உருவாக்குதல், கோவையில் சிட்கோ மற்றும் என்எஸ்சி மூலம் முன்னுரிமை அடிப்படையில் மூலப்பொருட்களை வழங்குதற்கு ஏற்பாடு செய்தல், என்.எஸ்.ஜ.சி.யின் நிதியுதவி பெற வங்கி உத்தரவாதம் அளித்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.