திண்டிவனம், டிச. 18: திண்டிவனம் அருகே ஏரியின் மதகு உடைந்து குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால் மக்கள் தவித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ்பேரடிக்குப்பம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரிலுள்ள ஏரி, நிவர் மற்றும் புரெவி புயலின் காரணமாக பெய்த மழையினால் முழு கொள்ளளவை எட்டியது. நேற்று பரவலாக கனமழை பெய்ததால் ஏரியில் இருந்த மதகு பழுதடைந்து நீர் கசிய தொடங்கியது. பின்னர் மதகு உடைந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறிது. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் முழுவதும் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. குடியிருப்பில் இருந்த மக்கள் அனைவரும் சாலைகளில் கைக்குழந்தைகளுடனும், முதியவர்களுடனும் பசியால் தவித்து நின்றனர். மேலும் அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளி பழுதடைந்துள்ளதால் நிவாரண முகாம் இல்லாமலும் தவித்து வருகின்றனர்.