புழல்: கொரோனா நிதி தராததால் ஏற்றுமதி நிறுவனத்திற்குள் மாநகராட்சி அதிகாரி குப்பை கழிவுகளை கொட்டிய சம்பவம் மாதவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாதவரம் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த துரைராஜ் (46), அதே பகுதியில் தோல் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இந்த நிறுவனத்திற்கு வந்த 23வது வார்டு மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர், ‘‘கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் தர வேண்டும்,’’ என்று கேட்டுள்ளார். அதற்கு துரைராஜ், ‘‘ஊரடங்கால் பல மாதங்களாக நிறுவனம் மூடப்பட்டு, தளர்வுக்கு பிறகு தற்போதுதான் திறந்து செயல்படுகிறது. கொரோனாவால் தொழிலும் மந்தமாகவே நடைபெறுகிறது. அதனால், அவ்வளவு பணம் தர முடியாது,’’ என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த துப்புரவு ஆய்வாளர், ‘‘பணம் தராவிட்டால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும்,’’ என எச்சரித்து சென்றார்.