கோவை, டிச. 11: கோவை சிறுதுளி தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பேரூர் செட்டிபாளையத்தில் 1.8 ஏக்கர் பரப்பளவில் மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நினைவாக எஸ்.பி.பி. வனம் நேற்று துவக்கப்பட்டது. பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி மறைந்தார். அவரது நினைவாக கோவை பேரூர் செட்டிப்பாளையம் ஊராட்சி மற்றும் சிறுதுளி அமைப்பின் சார்பில், எஸ்.பி.பி. வனம் உருவாக்கும் நிகழ்ச்சி பச்சாபாளையத்தில்உள்ள ஆபீசர் காலனியில் நேற்று நடந்தது. கீரின் காலம் அமைப்பின் நிறுவனர் மற்றும் திரைப்பட நடிகர் விவேக், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் ஆகியோர் பங்கேற்று மரங்களை நட்டு எஸ்.பி.பி. வனத்தை துவக்கி வைத்தனர். இதில், எஸ்.பி.பி.யின் 74 வயதை நினைவு கூறும் வகையில், ரோஸ்வுட், செஞ்சந்தனம், வேம்பு, சில்வர் ஓக், வேங்கை,தேக்கு, பண்ருட்டி பலா, சந்தன மரனம், மா மரம் என இசை கருவிகள் தயாரிக்கபடும் 74 வகையான மரங்கள் இசை குறியீடு வடிவத்தில் நடப்பட்டது.