சேலம், டிச.4: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம், சேலம் வந்திருந்தார். நேற்று காலை சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பயணியர் மாளிகைக்கு வந்தார். அங்கு அவரை கலெக்டர் ராமன் மற்றும் எம்எல்ஏக்கள் வரவேற்றனர். பின்னர், சேலம் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். கலெக்டர் ராமன், மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், எஸ்பி தீபாகனிகர், டீன் பாலாஜிநாதன், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார் மற்றும் அனைத்துத்துறை தலைமை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், கொரோனா தடுப்பு பணி குறித்தும், தற்போதைய பாதிப்பு நிலவரம் குறித்தும் அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். தொடர்ந்து, கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி எடுத்துரைத்தார். மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டம், குடிமராமத்து திட்ட பணிகள் மற்றும் பிற துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.