கோவை, டிச. 4: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் உருவாக்கப்பட்ட கரும்பு தாய்குருத்து வெட்டும் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடியில் நாற்று நடவு செய்த 30-ம் நாள் தாய்குருத்தை 25மிமி மேல் வெட்டிவிட வேண்டும். இதற்கு விவசாயிகள் கத்திரிகோல், கத்தி மற்றும் அறிவாள்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த முறையினால் முதுகுவலி, கருவிகளினால் கை,கால், கண்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான கரும்பு தாய்குருத்தை வெட்டுவதற்கே அதிக நேரமும் செலவும் தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு குமுளூர் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பண்ணை இயந்திரவியல் மற்றும் சக்தி துறையில் கரும்பு தாய்குருத்து வெட்டும் கருவியை உதவி பேராசிரியர் காமராஜ், தாஜூதீன் ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது.