33% பசுமை பரப்பை எட்டும் வகையில் தமிழக அரசு கோடிக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டு வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் 33 சதவீதம் பசுமை பரப்பை எட்டும் வகையில் அரசு புனித கடமையாக ஏற்று கோடிக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில், தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் இந்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இணைந்து நடத்திய ‘‘ஜி-20 மாபெரும் கடற்கரை தூய்மைப்படுத்தும்’’ நிகழ்ச்சியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் காலநிலைத்துறை செயலர் சுப்ரியா சாஹு, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை கலெக்டர் அமிர்தஜோதி, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தூய்மையான கடற்கரை மற்றும் கடற்கரை பாதுகாப்பு குறித்து உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து, தூய்மையான கடற்கரை மற்றும் கடற்கரை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் கடற்கரை மணல் பரப்பில் இருந்த குப்பைகளை அமைச்சர்கள், பள்ளி மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் சேகரித்தனர். முன்னதாக, கடற்கரையில் அமைக்கப்பட்டு இருந்த மணல் சிற்பங்கள், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தனர்.

இதன் பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
ஜி-20 மாநாட்டினையொட்டி உலகில் இருக்கிற 20 நாடுகளில் இன்றைக்கு கடற்பரப்புகளில் குவிந்து கிடக்கின்ற இந்த குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள கடற்கரையில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு நாள் மட்டும் குப்பை எடுப்பதன் மூலம் என்ன நடக்க போகிறது என்ற கேள்வி எழலாம். பொதுமக்களிடம் விழிப்புணர்வாக அமையும் என்பதற்காக தான் இந்த ஏற்பாடு.

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒட்டுமொத்த நிலப்பரப்பு ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 60 சதுர கிலோமீட்டராகும். ஒவ்வொரு நாட்டிலும் 33 சதவீதம் பசுமை பரப்பு இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் இருக்கின்ற பசுமை பரப்பு அமைந்திருக்கின்ற பகுதி என்பது 30 ஆயிரத்து 824.22 சதுர கிலோமீட்டராக உள்ளது. அதன்படி, மேலும், 12 ஆயிரத்து 76 சதுர கிலோமீட்டர் அளவிற்கு பசுமை பரப்பை உருவாக்குவது என்பது அரசின் கடமை. அதனை அரசு ஒரு புனித கடமையாக ஏற்று 33 சதவீதம் பசுமை பரப்பு என்கிற நீதியை எட்டுகின்ற வகையில் கோடிக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post 33% பசுமை பரப்பை எட்டும் வகையில் தமிழக அரசு கோடிக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டு வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: