காரைக்குடி, பிப். 21: காரைக்குடி முத்துபட்டணம் தாய், சேய் நலமையத்தின் பின்புறம் குப்பை மண்டி கிடப்பதால் கொசு கடிக்கு பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் தூய்மை பணியை மேற்கொள்ள வசதியாக இரண்டு டிவிசனாக பிரிக்கப்பட்டுள்ளது. முத்துபட்டணம் மற்றும் செஞ்சை பகுதியில் டிவிசன் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து துப்புரவு பணியாளர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும். இதற்கு என தனியாக மேஸ்திரி நியமிக்கப்பட்டு அவர் துப்புரவு பணியாளர்களை கண்காணிப்பார். முத்துபட்டணம் பகுதியில் உள்ள டிவிசன் அலுவலகத்துக்கு உட்பட்டு 1, 2, உள்பட பல்வேறு வார்டுகள் வரும். இவ்அலுவலகம் முன்பு முத்துபட்டணம் பகுதியில் செயல்பட்டு வரும் தாய், சேய் நல விடுதிக்கு பின்புறம் செயல்பட்டது. தற்போது வேறு பகுதிக்கு மாற்றப்பட்டு செயல்படுகிறது. பயனற்று கிடக்கும் பழைய டிவிசன் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் தெருக்கள், வீடுகளில் சேகரிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், டயர், தேங்காய் சிரட்டை மற்றும் பயனற்ற பொருட்களை சேகரிக்கும் மையமாக மாற்றி வருகின்றனர்.