அணைக்கட்டு, பிப்.19: பென்னாத்தூர் அடுத்த கேசவபுரத்தில் பாழடைந்து கிடந்த அங்கன்வாடி மைய கட்டிடம் அகற்றி ₹9 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பென்னாத்தூர் அடுத்த கேசவபுரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் இயங்கி வருகின்றது. இதில் இரு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் படித்து வருகின்றனர். இதில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கப்பள்ளி அருகே அங்கன்வாடி மையத்திற்கு புது கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையிலை இருந்தது. இதையடுத்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு மாற்றபட்டது.அவ்வாறு மாற்றப்பட்ட கட்டிடத்தில் குழந்தைகள் விளையாட, கல்வி கற்க போதிய இடவசதியில்லாத காரணத்தினால் சிரமப்பட்டு வந்தனர். இதனால், இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தை இடித்து அகற்றி, புது கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.