சிவகங்கை, ஜன. 29: சிவகங்கை அருகே அரசினிபட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்று ெபாதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சி அரசினிப்பட்டியில் குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து தலைமை வகித்தார். கலெக்டர் ஜெயகாந்தன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். ஐஓபி மேலாளர் தியாகராஜன் கேஸ் சிலிண்டர் பாதுகாப்பு மற்றும் சிக்கனம் குறித்து பேசினார். கூட்டத்தில் குடிநீர் சிக்கனம், மழைநீர் சேகரிப்பு, சுகாதாரம், பிளாஸ்டிக் ஒழிப்பு, மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம், ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எம்பி கார்த்திசிதம்பரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், தாசில்தார் மைலாவதி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கண்ணாத்தாள்கார்த்தி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.