விருதுநகர், ஜன.28: சேத்தூரில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்த ராமர் மற்றும் அவரின் மகன்கள், மகன், மருமகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். ராஜபாளையம் அருகே சேத்தூரை சேர்ந்த மக்கள் கிருஷ்ணன் தலைமையில் கலெக்டர் கண்ணன், எஸ்பி., பெருமாள் ஆகியோரிடம் அளித்த மனுவில், சேத்தூரை சேர்ந்த ராமர், இவர் பல ஆண்டுகளாக கந்துவட்டி மற்றும் ஏலச்சீட்டு தொழில் செய்து வருகிறார். கோடிக்கணக்கில் சீட்டு வசூல் செய்து வரும் ராமர் 10 வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். கூலிதொழில் செய்து வரும் எங்களை அணுகி ஏலச்சீட்டு போடும்படியும், நல்ல லாபம் கிடைக்கும், ஏலம் முடிந்த உடனுக்குடன் பணம் தருவதாக ராமர் உறுதி அளித்தார். அதை நம்பி சேத்தூரை சேர்ந்த பலர் ராமர் நடத்தும் ஏலச்சீட்டின் பல குரூப்களில் சீட்டு போட்டுள்ளனர்.