திருப்புவனம், டிச.5: திருப்புவனம் மட்டை ஊருணி நிரந்தரமாக செயல்படும் வகையில் நடுகல் மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. திருப்புவனம் வைகை ஆற்றின் கரையில் மேம்பாலம் அருகே மட்டை ஊருணியில் நீண்டகாலமாக வாரச்சந்தை நடந்து வந்தது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான ஊருணிகள், குளங்கள் வரத்துக்கால்வாய்களில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரினர். இதேபோல் மட்டை ஊருணியில் நடந்து வந்த சந்தையை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு தூர்வாரப்பட்டது. ஊருணி நிரந்தரமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து ஊருணியில் நடு மண்டபம் அமைத்து கல் சுற்றுச்சுவர் போன்ற கட்டுமானப் பணிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.