திருவண்ணாமலை, டிச.4: திருவண்ணாமலை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விவசாயி, நள்ளிரவில் மர்ம ஆசாமிகளால் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(65), விவசாயி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் பிரேம்குமார்(26). மகள் லாவண்யா திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கணேசனும், மகேஸ்வரியும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.மகேஸ்வரி திருவண்ணாமலையில் தனது மகன் பிரேம்குமாருடன் தங்கி, தானிப்பாடியில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் பணிபுரிந்து வருகிறார். கணேசன் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டில் இருந்து கணேசனின் அலறல் சத்தம் கேட்டது. அதை கேட்டு அருகில் இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்களில் சிலர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது கணேசன், கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் சரமாரியான வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.