மேட்டூர், நவ.19: மேட்டூர் நகராட்சி குப்பை கிடங்கிற்கு மர்ம நபர்கள் தீ வைப்பதால், காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் மேட்டூர் அணையும் ஒன்று. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் மேட்டூர் அணையும், அணை பூங்காவும் மேட்டூர் நகராட்சியில் உள்ளது. மேட்டூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் சேகரிக்கப்படும் பல நூறு டன் குப்பைகள் சர்க்கார் தோட்டத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வைக்கப்பட்டு, மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தனித்தனியே தரம் பிரித்து உரம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெறாமல் முடங்கியுள்ளது. இதனால், நகராட்சி குப்பை கிடங்கில் குப்பைகள் மலைபோல தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ள குப்பை கிடங்கிற்கு சில சமயங்களில் மர்ம நபர்கள் தீ வைத்து விடுகின்றனர்.