பாடாலூர், நவ. 14: ஆலத்தூர் தாலுகா பகுதி சர்வீஸ் சாலைகளில் மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மின் விளக்குகளை சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை 2008ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போது தேசிய நெடுஞ்சாலை பகுதியிலுள்ள கிராமங்களுக்கு சென்று வரும் வகையில் ஒவ்வொரு கிராமங்களுக்கும் பாதை விடப்பட்டது. மேலும் ஒவ்வொரு கிராமம் உள்ள பகுதியிலும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது.அதன்படி ஆலத்தூர் தாலுகா பகுதியில் உள்ள பாடாலூர், இரூர், ஆலத்தூர் கேட், நாரணமங்கலம் ஆகிய பகுதிகளில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது அந்த சாலை வழியாக அந்த கிராமத்தில் உள்ள வாகனங்கள் சென்று வரும் வகையிலும் திருச்சி- பெரம்பலூர் செல்லும் பஸ்களும் சென்று வரும் வகையிலும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமம் உள்ள பகுதியிலும் தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு பக்கமும் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலைகளில் மின்சார கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார விளக்குகள் நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டபோது நன்றாக எரிந்து வந்தன. அதன்பின்னர் இந்த மின்சார விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாததால் சரியாக எரிவதில்லை.தற்போது உள்ள நான்கு வழிச்சாலையை ஒரு தனியார் நிறுவனத்திடம் டெண்டர் விடப்பட்டு அவர்களே தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதில் உள்ள மின்சார விளக்குகள் அனைத்தையும் பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு கிராமத்தின் பகுதியில் சர்வீஸ் சாலைகளில் உள்ள மின்சார விளக்குகளை டெண்டர் எடுத்த தனியார் நிறுவனம் முறையாக பராமரிப்பதில்லையென பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதனால் சர்வீஸ் சாலையில் உள்ள மின்சார விளக்குகள் சரியாக எரிவதில்லை.