திருவண்ணாமலை, நவ.13: திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்கள் நேற்று 2ம் நாளாக கிரிவலம் வந்தனர். திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. அதனால் ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இந்தமாத (ஐப்பசி) பவுர்ணமி கிரிவலம் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு தொடங்கி நேற்று இரவு 7.40 மணிக்கு நிறைவடைந்தது. பவுர்ணமி தொடங்கிய நேரத்திலிருந்து பக்தர்கள் கிரிவலம் வர ஆரம்பித்தனர். அதன்பின்னர் படிபடியாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இரவு 9 மணியளவில் கிரிவல பாதை முழுவதும் பக்தர்களே காணப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.