அரியலூர்,செப்.20: அரியலூர் மாவட்டத்தில் பேரீச்சை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார். இது குறித்து அரியலூர் கலெக்டர் வினய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பேரீச்சம் பழம் ஒரு ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்த ஆரோக்கியமான பழமாகும். உலக சந்தையில், இந்தியா கிட்டத்தட்ட 35% பேரீச்சம் பழத்தினை இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தேவை அதிகம் இருப்பதால் பேரீச்சையை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.பொதுவாக பேரீச்சை அரபு நாடுகளில் உள்ள பாலைவனங்களில் அதிகமாக வளரக்கூடியவை. ஆனால் இதர இடங்களிலும் பேரீச்சை மரங்களை நல்ல முறையில் சாகுபடி செய்யலாம். தமிழ்நாட்டில் வணிகரீதியாக தர்மபுரி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 100 ஏக்கர் பரப்பில் பேரீச்சை சாகுபடி செய்து விவசாயிகள் லாபம் அடைந்து வருகின்றனர்.தமிழ்நாட்டில் விவசாயிகள் பேரீச்சை சாகுபடி செய்வதை ஊக்குவிப்பதற்காக தோட்டக்கலைத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் வாயிலாக 2019-20 ம் ஆண்டில் பேரீச்சை சாகுபடி செய்வதற்கு ஒரு எக்டருக்கு 30,000 என்ற விகிதத்தில் மானியம் வழங்கப்படுகிறது.