கழிப்பறையை மராமத்து செய்யக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

வத்திராயிருப்பு, செப். 17: வத்திராயிருப்பில் கழிப்பறையை மராமத்து செய்யக்கோரி, பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வத்திராயிருப்பு 10வது வார்டில் பெண்கள் கழிவறை உள்ளது. இந்த கழிவறையை முறையாக பராமரிக்காததால், பயன்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனால், கடந்த 3 மாதமாக பெண்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மழை காலங்களில் பெண்கள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, கழிவறையை மராமத்து செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், நேற்று காலை 10வது வார்டைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு, கழிப்பறையை பராமரிக்ககோரி, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கழிப்பறையை மராமத்து செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி கோஷமிட்டனர். இதில், முன்னாள் திமுக கவுன்சிலர் மாரிமுத்து, மார்க்சிஸ்ட் மணிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.

வெளியூரில் இருந்த பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், போராட்டக்காரர்களிடம் செல்போனில் பேசி, ‘கழிவறை மராமத்து பணி நாளை துவக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை பெண்கள் கைவிட்டனர். இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: