மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாப பலி

ஸ்பிக்நகர், ஜூலை 24: தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.  புளியம்பட்டி அருகே அக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த அருணாச்சலம் மகன் மாரியப்பன் (35). மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் முத்தையாபுரம் சாந்தி நகரில் உள்ள தன்னுடைய வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அங்குள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக மாரியப்பனை அழைத்து வந்துள்ளார்.  மரத்தில் ஏறிய மாரியப்பன் எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த மாரியப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: