விருதுநகர்-செங்கோட்டை ரயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணி

விருதுநகர், மே 23: விருதுநகரில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

விருதுநகரில் இருந்து சாத்தூர் செல்லும் சாலையில் விருதுநகர்-செங்கோட்டை தண்டவாளம் அமைந்திருப்பதால் நவீன இயந்திரங்கள் கொண்டு தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நேற்று ஒரு நாள் முழுவதும் செய்யப்பட்டது. இதனால் இந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து புதிய பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள எம்ஜிஆர் சாலை வழியாக நான்கு வழிச்சாலை மூலம் சாத்தூர் செல்லும் பஸ்கள் நேற்று திருப்பி விடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து தண்டவாளம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் கூறியதாவது: குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஒருமுறை தண்டவாளங்களும் அதற்கு கீழே உள்ள ஜல்லிக்கற்களும் பராமரிப்பு செய்தாக வேண்டும். வழக்கமாக பணியாளர்களை கொண்டு பராமரிப்பு பணி தொடர்ச்சியாக செய்து வந்தாலும் இயந்திரம் மூலமாக சில குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை செய்வதால் இந்த தண்டவாளத்தில் செல்லும் ரயில்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.  மேலும் இயந்திரம் மூலம் பராமரிப்பு பணி செய்யும் போது சுத்தமாக தண்டவாளத்தையும் தண்டவாளத்தின் கீழே இருக்கக்கூடிய ஜல்லிக் கற்களை எடுத்து மீண்டும் நல்ல நிலையில் அழுத்தத்தோடு வைக்கப்படுவதால் இந்த தண்டவாளத்தில் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது’ என்றனர்.

Related Stories: