தா.பழூர், மார்ச் 15: தா.பழூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்காவிட்டால் குடியுரிமை ஆவணங்களை தாசில்தாரிடம் ஒப்படைப்போம் என்று மாட்டுவண்டி தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாலமுருகன், துணைத்தலைவர் தனவேல், சங்க ஆலோசகர் கணேசன் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மீன்சுருட்டி செயலாளர் ராஜேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சாபிகேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.