பெரம்பலூர், மார்ச் 15: மனநலம் பாதிக்கப்பட்டதால் குடும்பத்தை விட்டு பிரிந்த பீகாரை சேர்ந்தவர், மனநல காப்பகத்தின் சிகிச்சையால் 12 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்பட்டார். பெரம்பலூரில் கடந்தாண்டு ஜூன் 16ம் தேதி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலம் துறைமங்கலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் 55 வயதுடைய நபர் ஒருவர் மீட்கப்பட்டார். இவர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் சிறுவாச்சூர் இடையே இயங்கி வரும் வேலா மனநல காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சை மூலம் பராமரிக்கப்பட்டு வந்தார். கடந்த சில மாதத்துக்கு முன் தன்னை பற்றி புரிந்து கொள்ளும் அளவுக்கு அந்தநபர் சுய நினைவு பெற்றார். இதைதொடர்ந்து வேலை மனநல காப்பக நிர்வாகி அருண்குமார் குணமடைந்த அந்த நபரிடம் விசாரித்தபோது மிதிலேஷ் என்றும், பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டம், தானா நகர்சட் தாலுகா, சஜாஜிப்பூர் கிராமம், ராஜ்பிகார் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.