திண்டுக்கல், மார்ச் 15: நூறு சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை திண்டுக்கல் பஸ்நிலையத்தில் பயணிகளிடம் கலெக்டர் வினய் வழங்கினார்.திண்டுக்கல் லோக்சபா தொகுதிக்கும், நிலக்கோட்டை சட்டசபை தொகுதிக்கும் வரும் ஏப்.18ல் தேர்தல் நடக்கிறது. இதில் நூறு சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளிடம் அதிகளவு பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. எல்இடி வாகனம் மூலம் கிராமங்கள் தோறும் பிரசாரம் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கலெக்டர் வினய் அனைத்து பஸ்களிலும் ஏறி, 100 சதவீதம் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி, பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார். ஆட்டோ உட்பட பல வாகனங்களில் நோட்டீஸ்களை ஒட்டினார். இதில் பயிற்சி கலெக்டர் ஷேக்அப்துல், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்தன், அரசு போக்குவரத்து பொது மேலாளர் ராஜேஷ், ஆர்.டி.ஓ ஜீவா உட்பட பலர் பங்கேற்றனர்.வாக்காளர்கள் ஓட்டளிப்பதை தவிர்க்க கூடாது. அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் பிரசாரம் செய்து வருகிறோம் என கலெக்டர் தெரிவித்தார்.