நத்தம், மே 9: நத்தம் அருகே செந்துறையில் உள்ள புனித சூசையப்பர் ஆலய திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 5ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதில் பங்குத் தந்தையர்கள் இன்னாசிமுத்து, மரியபிரான்சிஸ் பிரிட்டோ, மைக்கேல்ராஜ்,ஆசீர் ஜான்சன், செபாஸ்டீன்அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து விழாவின் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு திருப்பலியும், மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது. கடந்த 6ம் தேதி மாலை புனித செபஸ்தியார் வேண்டுதல் பொங்கல் வைத்தல்,இரவு புனித செபஸ்தியார் வேண்டுதல் சப்பரபவனியும், தொடர்ந்து அன்பின் விருந்தும் நடந்தது. மறுநாள் செவ்வாய்க்கிழமை பொது பொங்கல் வைத்தலை தொடர்ந்து இரவு ஆடம்பர திருவிழா திருப்பலி, நற்கருணை பவனியும், அனைவருக்கும் அன்பின் விருந்தும் நடந்தது.
நேற்றுஅதிகாலை மற்றும் மாலையிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனிதர்களின் பவனி நடந்தது. அப்போது பக்தர்கள் குழந்தைகளை புனிதர்களின் காலடியில் வைத்து ஆசீர்வதித்தனர். மேலும் பக்தர்கள் நேர்த்திக் கடனாக உப்பு மற்றும் பொரிகளை செலுத்தினர். மேலும் விவசாயம் செழிக்கவும்,மழை வேண்டியும் சிறப்பு திருப்பலி நடந்தது. இன்று (மே 9) காலை முதல் திருவிருந்து திருப்பலியும் நடைபெறுவதை தொடர்ந்து மாலை நற்கருணை பவனி பழைய கோயிலிலிருந்து புறப்பட்டு பங்கு ஆலயத்தை வந்தடைந்து கொடியிறக்கம் செய்து திருவிழா நிறைவடையும். ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
The post நத்தம் அருகே செந்துறையில் புனித சூசையப்பர் ஆலய திருவிழா: புனிதர்களின் சப்பர பவனி நடந்தது appeared first on Dinakaran.
