விருதுநகர், மார்ச் 14: விருதுநகர் மாவட்டத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து விதிமீறலால், விபத்து அதிகரித்து உயிர்ப்பலி ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து போலீசார் விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. தற்போது வீட்டிற்கு 2 டூவீலர்கள் என்பது சாதாரணமாகி விட்டது. வாகனங்களின் பெருக்கத்திற்கு ஏற்ப சாலைகளை அகலப்படுத்தவோ, சீரமைக்கவோ இல்லை. குண்டும் குழியுமான சாலையில் செல்வோர் விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடர்கிறது. இது ஒரு புறமிருக்க புரோக்கர்களின் கவனிப்பால் ஆர்டிஓ அலுவலகத்தில் பலர் எளிதில் ‘டிரைவிங் லைசென்ஸ்’ பெறுகின்றனர். மேலும், போக்குவரத்து போலீசாரும் தங்கள் பணியை முறையாகச் செய்வதில்லை என புகார் கூறுகின்றனர். போக்குவரத்து விதிமுறைகள் குறித்து யாரும் அக்கறைப்படுவதில்லை. சிக்னலில் மஞ்சள் விளக்கு எரியும்போது கூட, விரைவாக சென்று விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இது மட்டுமல்லாமல் பழுதான டூவீலரை, ஒர்க் ஷாப் எடுத்து செல்ல மற்றொரு டூவீலரில் ‘டோ’ என்ற பெயரில் காலால் மிதித்து கொண்டு செல்கின்றனர். நல்ல நிலையில் இருக்கும் சைக்கிள், டூவீலர்களை கூட முன்னால் செல்லும் டிராக்டர், வேன் ஆகியவற்றின் பக்கவாட்டை ஒரு கையில் பிடித்து ஓட்டிச் செல்கின்றனர். இதில் வாகன டிரைவர்கள் திடீர் பிரேக் அடித்தால் விபத்து ஏற்படும். பள்ளி முடிந்து செல்லும் மாணவர்கள், டூவீலர்கள் நான்கு பேர் செல்வோர்கள், ஹெல்மட் அணியாமல் செல்கின்றனர். எனவே, நகரில் போக்குவரத்து போலீசார், வாகனங்களில் விதிமுறை மீறிச் செல்வோரை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.