திண்டுக்கல், மார்ச் 14: எம்பி தேர்தலையொட்டி நடந்து வரும் வாகன பரிசோதனையால் வியாபாரிகள் பொருட்கள் வாங்க வெளியூர்களுக்கு செல்வதில் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வருகிற ஏப்.18ல் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். டூவீலர், கார், வேன், லாரி உள்ளிட்ட தனியார் வாகனங்கள் பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.திண்டுக்கல் மாவட்டத்தில் மளிகை, அரிசி, இரும்பு பொருட்கள், ஸ்டேசனரி, பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் நடத்துபவர்கள் மதுரை உள்பட வெளிமாவட்டங்களிலேயே பொருட்கள் கொள்முதல் செய்கின்றனர். கொள்முதல் செய்யும் பொருட்களுக்கான பணத்தை வியாபாரிகளில் பெரும்பாலானோர் நேரடியாக கொண்டு செல்கின்றனர். வங்கி மூலம் பரிமாற்றம் செய்வது கிடையாது. சொந்தமான அல்லது வாடகை சரக்கு வாகனங்கள், கார்களில் சென்று பொருட்களை கொள்முதல் செய்வது வழக்கம்.இந்நிலையில் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே பணம் கொண்டு செல்லலாம், அதற்கு மேல் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வியாபாரிகள் பணம் கொண்டு செல்லும்போது அதற்கான ஆவணங்களை வைத்திருக்க முடியாது. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.