வேப்பூர் ஒன்றிய ஊராட்சிகளில் தொழில் வளாகங்களை வாடகைக்கு பெற தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் 22ம் தேதி கடைசி

பெரம்பலூர், பிப்.13: வேப்பூர்,  நன்னை, கீழப்புலியூர், முருக்கன்குடி ஊராட்சிகளில் உள்ள அரசுக்குச்  சொந்தமான தொழில் வளாகங்களை வாடகைக்கு பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர் வருகிற  22ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.  

 இதுகுறித்து  பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர்  மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், நன்னை ஊராட்சியில் 6,617 சதுர அடியில்  அமைந்துள்ள 3 கட்டிடங்கள், கீழப்புலியூர் ஊராட்சியில் 3,965 சதுர அடியில்  அமைந்துள்ள 3 கட்டிடங்கள், முருக்கன்குடி ஊராட்சியில் 5,907 சதுர அடியில்  அமைந்துள்ள 2 கட்டிடங்கள் ஆகியன வாடகை அடிப்படையில் ஆயத்த ஆடைகள்  தயாரித்தல் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பது தொடர்பான பிற தொழில்  நிறுவனங்களுக்கு தொழில் தொடங்கி, இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு  வழங்கிடும் பொருட்டு வாடகைக்கு விடப்பட உள்ளது.

தொழில் வளாகங்களை  வாடகைக்கு பெற ஆர்வமுள்ள தொழில்முனைவோர்  அதற்கான விருப்ப விண்ணப்பங்களை  வருகிற 22ம்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விரிவான  விவரங்களை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில  ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகப் பணி நேரங்களிலும், www.perambalur.nic.in என்ற இணையதளம்  வாயிலாகவும் அறிந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: