போளூர், ஜன.4: போளூர் பகுதியில் மின் கட்டணம் குறித்த எஸ்எம்எஸ் கிடைப்பதில் குளறுபடி ஏற்படுகிறது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக மின்வாரியம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமாக மாறிய பின்னர், மின்கட்டணம் கட்டுவதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து தபால் நிலையங்கள், வங்கிகள் மற்றும் ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம் என்ற அறிவிப்பு வரவேற்பை பெற்றாலும், குழுப்பமான சூழ்நிலையே உள்ளது.இந்நிலையில், போளூர் உள்பட பல பகுதிகளில் இதுவரை மின்கட்டணம் குறித்த எஸ்எம்எஸ் எதுவும் வரவில்லை. சிலர் மின் கட்டணம் செலுத்தும் மையத்தில் ேகட்டும் சரியான தகவல் இல்லை. இதில் பெரும்பாலானோர் எஸ்எம்எஸ் வரும் என்று காத்திருந்து அபராதத்துடன் மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.இதேபோல், தபால் நிலையம் மற்றும் ஆன்லைனில் மின்கட்டணத்தை கட்டினாலும், சில நேரங்களில் இணையதள தொழில் நுட்ப குளறுபடி காரணமாக குறிப்பிட்ட நாட்களில் மின்வாரிய கணக்கில் பணம் வரவு வைக்கப்படாமல், சில நாட்கள் காலதமாதமாக வரவு வைக்கப்படுகிறது.