விருதுநகர், நவ. 1: கண்மாய் நீர்வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, விருதுநகரில் கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள சிலுக்கபட்டி கிராம விவசாயிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சிலுக்கபட்டி, மண்டபசாலை பகுதியில் பெய்யும் மழைநீர், வரத்துக் கால்வாய் மூலம் சிலுக்கபட்டி எல்லையில் உள்ள கரிசல் கண்மாய் மற்றும் வீரப்பன் ஊருணியில் தேங்குகிறது.
இந்நிலையில், கண்மாய், ஊருணிக்கு தண்ணீர் வரும் வரத்துக் கால்வாயை தனிநபர் ஒருவர், தனது தோட்டத்திற்கு செல்லும் பாதைக்காக, மொத்தமாக மூடி பாலம் அமைத்துள்ளார். இதனால், கண்மாய்க்கு செல்லும் தண்ணீர் அருகில் உள்ள விவசாய நிலங்களில் தேங்கி, பயிர்களை அழிக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, நீர்வரத்துக் கால்வாயை சீரமைத்து கண்மாய், ஊருணிகளில் தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.