வேலூர், அக்.10: திருநெல்வேலி தாமிரபரணி மகா புஷ்கரம் விழாவிற்கு வேலூரில் இருந்து 150 போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா புஷ்கரம் விழா வெகு விமரிசையாக நடைபெறும். 12 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தாமிரபரணி ஆற்றில் புனித நீராடுவார்கள். பின்னர், கரையில் அமைக்கப்படும் தாமிரபரணி அன்னையை குடும்பத்தினருடன் வழிபட்டு வணங்கிச் செல்வார்கள். அதன்படி நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் நாளை மகா புஷ்கரம் விழா தொடங்க உள்ளது. 12 நாட்களுக்கு நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பர் என்பதால் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.