கலசபாக்கம் அருகே தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

கலசபாக்கம், செப்.6: கலசபாக்கம் அருகே தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். கலசபாக்கம் அடுத்த கடலாடி மதுரா குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(65). இவரது மனைவி வள்ளியம்மாள்(55). இவர்கள் கடந்த மாதம் 26ம் தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அவர்களுடைய விவசாய கிணற்றில் வீசப்பட்டனர்.

இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும். ஏடிஎஸ்பி வனிதா தலைமையில் 3 டிஎஸ்பிக்கள், 3 இன்ஸ்பெக்டர்கள், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 3 தனிப்படையினர் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை எஸ்பி சிபிசக்கரவர்த்தி சம்பவ இடதிற்கு சென்று தொடர்ந்து 4 நாட்கள் விசாரணை மேற்கொண்டார்.தனிப்படை போலீசார் கடலாடி கிராமம் மற்றும் திருப்பூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும் கொலை நடந்து 10 நாட்களாகியும் குற்றவாளிகளை பிடிப்பதில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.கூலிப்படையோ அல்லது பழைய குற்றவாளிகளோ கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் பழைய குற்றவாளிகளின் பட்டியல், கூலிப்படையினர், குற்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர்கள் உள்ளிட்டவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Related Stories: