சென்னை: உயர் அழுத்த மின்கோபுர திட்டத்திற்கு எதிரான விவசாய கூட்டமைப்பினரை கைது செய்வதா? என, எஸ்டிபிஐ கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் இணைந்து, தமிழகத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரங்களை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.இதுபோன்ற உயர் அழுத்த மின்கோபுர திட்டங்களால் ஏற்படும் மின்கதிர் வீச்சால், புற்றுநோய் கருச்சிதைவு, மலட்டுத்தன்மை ஏற்படும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அத்திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு மாற்றாகச் சாலை வழியாக புதைவடம் மூலம் திட்டத்தை மேற்கொள்ள அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், விவசாயிகளின் கோரிக்கையை நிராகரிப்பது மட்டுமல்லாமல், எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் மீது ஆங்கிலேயர் கால தந்தி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறை சிறையில் அடைத்து வருகின்றது.