மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை, பனி மூட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மஞ்சூர், டிச.19: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் துவங்கும் வடகிழக்கு பருவமழை நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்நிலையில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக கடந்தமாதம் இறுதியில் துவங்கியது. வழக்கமாக வடகிழக்கு பருவமழையின் போது மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் பெரிய அளவிலான பாதிப்புகள்ஏற்படும். குறிப்பாக மஞ்சூர்,ஊட்டி,குன்னூர் சாலை,மஞ்சூர்,அப்பர்பவானி சாலை,மஞ்சூர், கிண்ணக்கொரை சாலை, எடக்காடு எமரால்டு சாலை உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தும், மண் சரிவுகள் ஏற்படுவதும் வாடிக்கையாகும்.

இந்நிலையில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் குறைந்த நாட்கள் மட்டுமே நீடித்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்தது. மேலும் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. சாரல் மழையுடன் கடும் பனி மூட்டமும் நிலவுவதால் பகல் நேரங்களிலும் கடும் குளிர் வாட்டுகிறது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்தது. தொடர்ந்து நேற்று காலை முதலும் சாரல் மழையுடன் எதிரே உள்ள பொருட்கள் தெரியாத அளவிற்கு கடுமையான பனி மூட்டமும் நீடித்தது. இதனால் வார சந்தை தினமான நேற்று திங்கள்கிழமை மஞ்சூர் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது. மேலும் பனி மூட்டம் காரணமாக மலைப்பாதையில் அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதால் முகப்பு விளக்குகளை ஒளிர செய்தபடி குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டது.

The post மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை, பனி மூட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: