பெருந்துறையில் ஸ்கூட்டர் திருடியவர் கைது

 

ஈரோடு, பிப். 9: ஈரோடு மாவட்டம் பெருந்துறை பவானி சாலை சந்திரபோஸ் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (55). தனியார் இன்சூரன்ஸ் நிறுவன முகவர். இவர், கடந்த 6ம் தேதி அவரது சகோதரியின் ஸ்கூட்டரை பெருந்துறை பங்களா வீதியில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முன் நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.

சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்தபோது, ஸ்கூட்டரை காணவில்லை. அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காததால் பெருந்துறை போலீசில் செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் பெருந்துறை போலீசார் நேற்று முன்தினம் திருவாச்சி பஸ் ஸ்டாப் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக ஸ்கூட்டரில் சந்தேகப்படும்படியாக வந்த நபரை பிடித்து விசாரித்ததில், அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில், அந்த நபர் தர்மபுரி மாவட்டம் பென்னகரம் தொன்னகுட்ட அள்ளியை சேர்ந்த மகேந்திரன் மகன் குமார் (36) என்பதும், அவர் ஓட்டி வந்தது செல்வராஜ் ஸ்கூட்டர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, குமாரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மேலும், குமாரிடம் இருந்த ஸ்கூட்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post பெருந்துறையில் ஸ்கூட்டர் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: