புரட்டாசி 3வது சனி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராமநாதபுரம், அக். 8: புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்புல்லானி பத்மாஷினி தாயார் உடனுறை ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் விஷேச திருமஞ்சனம், விஷ்ணு சகஸ்ரநாமம், நாலாயிர திவ்யபிரபந்தம், சாற்று முறை கோஷ்டிபாராயணம் பாடப்பட்டு, சிறப்பு அபிஷேகம், தீபராதனை நடந்தது. பெருமாளுக்கு பக்தர்கள் துளசி, தாமரை மாலை அணிவித்தனர். கோயிலுள்ள பட்டாபிஷேக ராமருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல், தேவிப்பட்டினம் கடலடைத்த பெருமாள் கோயில் மற்றும் சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீரஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

பக்தர்கள் வெற்றிலை, துளசி மற்றும் வடை மாலை அணிவித்து வழிபட்டனர். முதுகுளத்தூர் அருகே ஆதங்கொத்தங்குடி ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பெருமாள் மற்றும் பத்மாவதி தாயாருக்கு மஞ்சள், விபூதி, சந்தனம், தேன் உள்ளிட்ட 11 வகை அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டு, சிறப்பு தீபராதனை நடந்தது. கடலாடி அருகே உள்ள கொத்தங்குளம் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீலாதேவி உடனுறை வரதராஜபெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

தொண்டியில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ உந்தி பூத்த பெருமாள் கோயிலில் உற்சவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 12 மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post புரட்டாசி 3வது சனி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: