பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள் 2022-2023ம் ஆண்டுக்கான மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருச்சி, ஏப்.7: ‘மீண்டும் மஞ்சப்பை’ பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் 2022-2023 நிதியாண்டிக்கான சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரால் சட்டமன்றத்தில் மஞ்சப்பை விருதுகள் அறிவிக்கப்பட்டது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தி, மாற்று பொருட்களான மஞ்சப்பை, பாக்குமட்டை, காகிதங்களால் ஆன கவர்கள் ஆகிய சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்து தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களை தேர்வு செய்து இவ்விருதானது வழங்கப்படும். மாநில அளவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தி பிளாஸ்டிக் இல்லாத வளாகத்தை உருவாக்கும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படும். முதல் பரிசு ரூ 10 லட்சம், 2வது பரிசு ரூ.5 லட்சம், 3வது பரிசு ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்தும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு மஞ்சப்பை விருதினை வழங்க உள்ளது. இந்த விருதிற்கான விண்ணப்ப படிவங்களை கலெக்டர் அலுவலக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் ஆவணங்களில் தனிநபர் துறை தலைவர் கையொப்பமிட வேண்டும். விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகள் மற்றும் மென்நகல்கள் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், 5, சிட்கோ தொழிற்பேட்டை, துவாக்குடி, திருச்சி-15 என்ற முகவரியில் சமர்ப்பிக்கவும். விண்ணப்பங்கள் ேம 1ம் தேதி வந்து சேர வேண்டும் என திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

The post பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள் 2022-2023ம் ஆண்டுக்கான மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: