சென்னை: ரெம்டெசிவிர் மருந்தை தயாரிக்கும் முன்னணி நிறுவனம் ஒன்று தங்கள் தயாரிப்பில் சில குறைபாடுகள் இருப்பதால் அதனை பயன்படுத்த வேண்டாம் என அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஹெடிரோ ஹெல்த்கேர் நிறுவனமே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அவசர கடிதம் ஒன்றை மருத்துவமனைகள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு அந்நிறுவனம் அனுப்பியுள்ளது. அதில் தங்கள் நிறுவனத்தில் இருந்து விநியோகிக்கப்பட்ட கோவிபர் HCL – 21013 பேட்ஜ் மருந்தை நிறுத்தி வைக்கும்படியும் பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு தொழில்நுட்ப குறைபாட்டை அந்நிறுவனம் காரணமாக காட்டியுள்ளது. இந்தியாவில் ரெம்டெசிவிர் மருந்து ஈடுபடும் 7 மருந்து நிறுவனங்களில் ஹெடிரோவும் ஒன்று. அதிகளவில் ரெம்டெசிவிர் மருந்துகளை தயாரிப்பதோடு அதற்காக கூடுதல் விலையை நிர்ணயித்திருப்பதும் இந்நிறுவனம் தான். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மூச்சுத்திணறலால் அவதிப்படும் போது அதனை கட்டுப்படுத்த ரெம்டெசிவிர் ஊசி போடப்படுகிறது. தமிழகம் முழுவதும் இந்த ஊசி மருந்துக்கு கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கள்ளச்சந்தையில் பலமடங்கு விலை வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மருந்து கழகம் சார்ப்பில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு கவுண்டர்கள் அமைத்து விற்பனை செய்து வருகின்றன. இங்கு குறைந்த விலையில் ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதால் மக்கள் பலமணி நேரம் காத்திருந்து வாங்கி செல்கின்றனர். ஹெடிரோ நிறுவனத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்துகள் தமிழகத்திற்கு இதுவரை வரவில்லை என்றும் வந்தால் தடை செய்யப்படும் என்றும் தமிழ்நாடு மருந்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.