திருத்தணி முருகன் கோயிலில் ஆந்திர அமைச்சர் ரோஜா சாமி தரிசனம்

 

திருத்தணி : திருத்தணி முருகன் கோயிலில் ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா சாமி தரிசனம் செய்தார். ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடந்தது. சித்தூர் மாவட்டம் நகரி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக நடிகை ரோஜா பொறுப்பு வகித்து வருகிறார்.

நகரி சட்டமன்ற தொகுதியில் கட்சி நிர்வாகிகளை ஓரங்கட்டி தனது குடும்பத்தினருக்கு அதிகாரம் வழங்கியதாகவும், இதனால் கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்ப்பை பெற்றார். ஒரு கட்டத்தில் நகரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ரோஜாவுக்கு எதிராக போர் கொடி தூக்கி அவருக்கு மீண்டும் சீட்டு வழங்க கூடாது என கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டியிடம் நேரடியாக புகார் செய்தனர்.

இருப்பினும், கட்சியினரின் கடும் எதிர்ப்பை மீறி மீண்டும் 3வது முறையாக நகரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த நகரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முக்கிய நிர்வாகிகள் அக்காட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து ரோஜாவின் வெற்றியை தடுக்க கடுமையான தேர்தல் பணியாற்றியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் முடிந்த கையோடு 40 நாட்களாக அமைச்சர் ரோஜா ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடக உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் நேற்று திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்த ரோஜா பய பக்தியுடன் முருகப்பெருமானை வணங்கி தேர்தலில் வெற்றி பெற முருகப்பெருமான் துணை நிற்க வேண்டும் என்று வேண்டி வணங்கினார்.

The post திருத்தணி முருகன் கோயிலில் ஆந்திர அமைச்சர் ரோஜா சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: